முகப்பு
இந்தியா

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஹவாலா முறையில் ரூ.100 கோடி பணப்பரிமாற்றம்: கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை

Updated On : 7 மே, 2024 at 11:41 AM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லி கலால் கொள்கை பண மோசடி வழக்கில் 176 போன்கள் அழிக்கப்பட்டுள்ளன, ரூ.100 கோடி அளவுக்கு ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்துள்ளார்.

தில்லியில் மக்களவைத் தோ்தலையொட்டி, கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததது. இன்றைய விசாரணை தொடங்கிய போது, ஹவாலா வழிகளில் 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு, அது பிற மாநிலங்களில் செலவிடப்பட்டுள்ளது என்று எஸ்.வி. ராஜூ வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி கண்ணா, 100 கோடி என்பது "குற்றச் செயல்தான்" என்று கூறிய நீதிபதி கண்ணா, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அது எப்படி ரூ.1,100 கோடி ஆனது என்று கேட்டார். இது ஒரு அற்புதமான வருவாய் விகிதமாக இருக்கிறது என்றும் நீதிபதி கண்ணா தெரிவித்தார்.

இதையடுத்து தனது வாதத்தைத் தொடர்ந்த எஸ்.வி. ராஜூ, மொத்த விற்பனையாளர் ரூ.590 கோடி லாபம் அடைந்துள்ளார் என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது, இதில் கேஜரிவால் சம்பந்தப்படவில்லை, பிறகு விசாரணை தீவிரமடைந்து ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான், அந்தக் கோணத்தில் விசரணை நடத்தப்பட்டது என்றும் அவர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கில் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்பது உள்பட 5 கேள்விகளை அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதிகள் அமா்வு, ‘கேஜரிவாலின் கைதுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இதனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அமலாக்கத் துறையின் வாதத்தைக் கேட்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்ததது.

அதற்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிா்த்து வாதிடப்போவதாக எஸ்.வி. ராஜு நீதிபதிகளிடம் கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘‘நாங்கள் இடைக்கால ஜாமீன் குறித்து விசாரிக்க உள்ளோம் என்றுதான் கூறுகிறோம். ஜாமீன் வழங்கலாம் அல்லது வழங்காமல் இருக்கலாம்’’ என்று கூறினா். இதையடுத்து, மே 7-ஆம் தேதி விசாரணையை ஒத்திவைப்பதாகக் கூறிய நீதிபதிகள் அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களுக்கு தயாராக வருமாறு எஸ்.வி. ராஜுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது குறப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.