எஸ்பிஐ வங்கியில் இணையும் 12 ஆயிரம் பேர்: 85% பொறியியல் பட்டதாரிகள்!
எஸ்பிஐ வளர்ச்சிக்கு புதிய கைகள்: 12 ஆயிரம் பேர் சேர்க்கை!
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி ஏறத்தாழ 12 ஆயிரம் ஊழியர்களை வங்கியின் வெவ்வேறு பணியிடங்களுக்கு எடுக்கவுள்ளதாக வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
2024 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை 2,32,296 ஆக உள்ளது. முந்தைய ஆண்டு 2,35,858 ஆக இருந்தது.
2025-ல் ஏறத்தாழ 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் சேர்க்கும் செயல்முறைகள் தொடங்கியுள்ளதாகவும் இவர்கள் பொது ஊழியர்களாக எடுக்கப்பட்டாலும் ஆபிசர் மற்றும் அசோசியேட் பணியிடங்களில் சேர்க்கப்படவுள்ளனர். இவர்களில் 85 சதவிகிதம் பேர் பொறியாளர்களாக இருப்பதாக காரா தெரிவித்துள்ளார்.
புதிய ஊழியர்களுக்கு வங்கி செயல்பாடுகள் குறித்த கற்றலை அளித்த பிறகு அவர்களை பல்வேறு வகையிலான, தகவல் தொழில்நுட்ப பணிகள் உள்பட, பணிகளுக்கு மாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிவர்த்தனை அளவுகள் அதிகரித்து வருவதால் எஸ்பிஐ பணியாளர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்வது அவசியமாக உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
வங்கிச் செயல்பாடுகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டுவர பாரத ஸ்டேட் வங்கி எவ்வளவு செலவிடுகிறது என்கிற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார் காரா.
வங்கித் துறையின் சராசரியைக் காட்டிலும் வங்கிச் செயல்பாடுகளுக்காகும் செலவில் 7-8 சதவிகிதம் அதிகமாக செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.