மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?
மும்பை விளம்பரப் பலகை விழுந்து 14 பேர் உயிரிழப்பு
மும்பையில் வீசிய பலத்த காற்றால் காட்கோபர் பகுதியில் விளம்பர பலகை விழுந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் காயமுற்றுள்ளனர்.
திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் 100 அடி உயரமுள்ள விளம்பர பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்தது. பெட்ரோல் நிலையத்தில் சுமார் 150 வாகனங்கள் மழைக்காக ஒதுங்கியிருந்தன. 250 டன் எடை கொண்ட பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்தது.
மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கிருந்த மீட்கப்பட்ட 74 பேரில் 35 பேருக்கு இன்னமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈகோ மீடியாவின் இயக்குநர் பாவேஷ் பிண்டே மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ரயில்வே காவல் படைக்குச்(ஜிஆர்பி) சொந்தமான அந்த இடத்தில் விளம்பர பலகை வைக்க முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அதனை அகற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் கடந்த ஆண்டு குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், 24.08.2023 தேதியிட்ட புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த அசாம்பிதம் நேர்ந்ததாக எக்ஸ் வலைத்தளத்தில் பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என ஈகோ மீடியா நிறுவனம் இதனை விளம்பரப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை நிறுவிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மும்பை மாநகராட்சி கடந்த வாரம் ரயில்வே நிர்வாகத்துக்குக் கோரியதாகவும் நடவடிக்கை எடுப்பதற்குள் இந்த அசாம்பிதம் நேர்ந்ததாகவும் ரயில்வே காவல்படை தெரிவித்துள்ளது.
ஈகோ விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.