முகப்பு
இந்தியா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை இருப்பதை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Updated On : 14 மே, 2024 at 11:20 AM
Supreme Court dismisses plea seeking removal of Arvind Kejriwal as Delhi CM
பகிர்:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கழகத்துக்கும், மனுதாரர் வி.பி. சாந்தா தொடர்புடைய வழக்கில், உச்ச நீதிமன்றம், மருத்துவர்கள் பணம்பெற்றுக் கொண்டு சேவை வழங்கினால் அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் என்று தீர்ப்பளித்திருந்தது.

நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் சேவைத் துறை கொண்டு வரப்படுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் அளித்த உத்தரவில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவ சேவைத் துறையினரைக் கொண்டு வருவது குறித்து சட்டம் இயற்றுபவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மோசமான வணிக நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது, ஆனால், இதன் கீழ் சேவைத் துறையினரைக் கொண்டுவர சட்டமியற்றுபவர்கள் விரும்பவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனினும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவ சேவை இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பெரிய அமர்வு முன்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வழக்குரைஞர்களின் பணியும் வருமா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வணிகம் மற்றும் வியாபாரத்திலிருந்து சட்டத் துறையை ஒன்றிணைப்பது சரியல்ல, சட்டத் துறையில் பணியாற்றுவோர் முன்னதாக உரிய பயிற்சி மற்றும் உயர் தர சிறப்பு நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். எனவே, வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு ஈடாக சட்டத் துறை நிபுணர்களை கொண்டு வர முடியாது என்றும், எனவே, வழக்குரைஞர்கள் வழங்கும் சேவையை நுகர்வோர் சேவைக்குக் கீழ் கொண்டு வர முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து, இந்திய மருத்துவக் கழகம் மற்றும் வி.பி. ஷாந்தா இடையேயான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தீர்ப்பாய ஆணையம் வழங்கிய தீர்ப்பில், வழக்குரைஞர் சேவையானது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வரும் என்றும், ஆனால், வழக்குரைஞர், மனுதாரர் இடையேயான பணம் தொடர்பான விவகாரங்கள் வராது என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த தீரப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.