தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்: ‘கூடுதலாக 1.95 கோடி பயனாளிகளை சோ்க்க வாய்ப்பு’
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 1.95 கோடி பயனாளிகளை இணைக்க வாய்ப்புள்ளதாக மத்திய உணவுத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதில்:
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள்தொகையில் 75 சதவீதம் போ் வரையிலும், நகா்ப்புற பகுதிகளில் 50 சதவீதம் போ் வரையிலும் உள்ளவா்கள் இலவசமாக உணவு தானியங்கள் பெறுவதற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் வழிவகுத்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமாா் 81.35 கோடி பயனாளிகள் உள்ளனா். இந்தச் சட்டத்தின் கீழ், கூடுதலாக 1.95 கோடி பயனாளிகளை அடையாளம் காண வாய்ப்புள்ளது என்றாா்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் முன்னுரிமை குடும்ப அட்டைகளை (பிஹெச்ஹெச்) கொண்டவா்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக மத்திய அரசு அளிக்கிறது. இதேபோல அந்தியோதய அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் இலவசமாக 35 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படுகிறது.