கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா
கலால் கொள்கை மோசடியில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புது தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளாரை ஆதரித்து,ஞாயிற்றுக்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது: 20 நாள்களுக்குப் பிறகு நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். வரும் மே 25-ஆம் தேதி ஆம் நடைபெறும் தில்லி மக்களவைத் தோ்தலில், ஆத்மி கட்சியை நீங்கள் தோ்வு செய்தால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. நான் உங்களுக்காக உழைத்ததால் என்னை சிறைக்கு அனுப்பினாா்கள். தில்லி மக்களுக்கான பணிகள் நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை என்றார்.
மக்கள் தாமரை சின்னத்துக்கு(பாஜகவுக்கு) வாக்களித்தால் தான் மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என்று கேஜரிவால் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், அவரது இந்த கருத்து நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் என உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று(மே. 15) கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருப்பதை விமர்சித்துள்ள அமித் ஷா, இதை வழக்கமான தீர்ப்பாகக் கருதவில்லை என்றும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு சலுகை வழங்கியிருப்பதாகவும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பதன் மூலம், உச்ச நீதிமன்ற உத்தரவை கேஜரிவால் மீறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.