இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்
இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது என ம.பி. உயர் நீதிமன்றம்
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியிருக்கும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் அமர்வு, சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை, இன்னமும் அமைதியான பார்வையாளராக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கருத்துக் கூறியிருக்கிறது.
சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய மனுவை விசாரித்த இதே நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, கருக்கலைப்புக்கு உத்தரவிட்டால், குற்றவாளிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த ஐந்து நாள்களுக்குப் பிறகு, இரண்டு நீதிபதிகள் அமர்வு இன்று கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
16 வயதாகும் சிறுமி, தனது உறவினரால் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுமியின் 20 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு தாயார் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தால் அவர் கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, அவரது 21 வாரக் கருவை பாதுகாப்பான முறையில் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் கண்காணிப்பில் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
கருவை தொடர்வது, சிறுமியின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம், அல்லது அப்பெண்ணின் உடல் நலனுக்கோ, மன நலனுக்கோ பாதிப்பாகலாம், இவற்றைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது, அவருக்கு எதிரான துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்த உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும், கருக்கலைப்புக்குப் பிறகும் அவரது உடல்நிலை மற்றும் மனநிலையை தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.