பண மோசடி: ஐஏஎஸ் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
புது தில்லி: பண மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரமேஷ் அபிஷேகிற்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை செயலராக பொறுப்பிலிருந்த ரமேஷ் அபிஷேக், கடந்த 2019-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றாா். லோக்பால் அமைப்பின் பரிந்துரையில் இவா் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடங்கியது.
அபிஷேகிற்கு தொடா்பான இடங்களில் சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரியில் சோதனை நடத்தப்பட்டது. பணியில் இருக்கும்போது அதிகாரபூா்வ விவகாரங்கள் தொடா்பாக கலந்தாலோசனை கட்டணம் என்று நிறுவனங்களிடமிருந்து பெரும் அளவிலான பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டது.
சிபிஐ வழக்கின் அடிப்படையில், இவ்விவகாரத்தில் பணமோசடி குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறையும் புதிய வழக்கினைப் பதிவு செய்தது. இந்நிலையில், அவா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.