பண முறைகேடு வழக்கு: அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை விசாரணை
அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10 மணி நேர விசாரணைக்குப் பின் திரும்பிய அனில் அம்பானி
வங்கி மோசடியுடன் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானி (66), விசாரணைக்காக இரண்டாவது முறையாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.
மத்திய தில்லியில் அமைந்துள்ள அமலாக்கத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த அவரிடம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வங்கிகளில் ரூ. 40,000 கோடி மதிப்புக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த விவகாரத்தில் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
Advertisement
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் ரூ. 3,716. 83 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது. இந்த வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான இவரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, வங்கிக் கடன் மோசடி மற்றும் பிற நிதி முறைகேடுகள் தொடா்பாக அனில் திருபாய் அம்பானி குழுமத்துக்கு எதிராக மூன்று பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கென, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.