ஆனந்த் அம்பானி பிறந்த நாள்! 9 கேரள கோயில்களுக்கு ரூ. 22.5 கோடி நன்கொடை!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளையொட்டி கேரள கோயில்களுக்கு நன்கொடை அளித்தது பற்றி..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி தனது பிறந்த நாளையொட்டி கேரளத்தில் உள்ள 9 கோயில்களின் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 22.55 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநருமான ஆனந்த் அம்பானி நேற்று (ஏப். 10) தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கோயில்களுக்கு நன்கொடைகளையும் அளித்துள்ளார்.
ஏப். 7 அன்று குருவாயூர் கிருஷ்ணர் கோயில், தளிப்பறம்பா ராஜராஜேஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த அவர், குருவாயூர் கோயிலுக்கு ரூ. 6 கோடியும் ராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 12 கோடியும் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.
Advertisement
மேலும், தலசேரி திருவங்காடு ஸ்ரீ ராமசுவாமி கோயில், திருச்சூர் கடவல்லூர் ஸ்ரீ ராமசுவாமி கோயில், திரூர் திருப்பரங்கோடு சிவன் கோயில், திரூர் திருக்கண்டியூர் மகாதேவர் கோயில், குருவாயூர் அருகே உள்ள அரியான்னூர் ஹரிகன்யாகா கோயில், மலப்புரம் வள்ளிக்குன்னுவில் உள்ள நிரம்காயிதா கோட்ட பகவதி கோயில், பரப்பனங்காடி நெடும்பரம்பு பகவதி கோயில் ஆகியவற்றுக்கு ரூ. 4.55 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக்கர் பரிந்துரையின் பேரில் கோயில்களைப் புதுப்பிப்பது மற்றும் கோயில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜேஸ்வரர் கோயில் நிர்வாகி கே.பி. வினயன் இதுபற்றி கூறுகையில், எங்கள் கோயிலின் நூற்றாண்டுகள் பழமையான கோபுரத்தைப் புதுப்பிப்பதற்கும் ஹெலிபேட் வசதியுடன் மேம்பட்ட வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கும் ஒரு திட்ட அறிக்கையை வழங்கியிருந்த நிலையில், அதற்கு ஆனந்த் அம்பானி ஒப்புதல் அளித்து முதல் தவணையாக ரூ. 3 கோடி வழங்கியுள்ளார். இதற்கான பணிகள் இன்னும் 10 நாள்களில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
திருவங்காடு கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ. 60 லட்சம் நன்கொடை, கோயிலின் புதுப்பிப்புப் பணிகளுக்கும் கருவறையின் மேற்பகுதியைச் செப்புத் தகடுகளால் மூடும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என கோயில் நிர்வாகி ஜெயராம் மூசாத் கூறுகிறார்.
ஆண்டுதோறும் நடைபெறும் கடவல்லூர் அன்யோன்யம் நிகழ்ச்சியால், புகழ்பெற்ற கடவல்லூர் கோயிலில், மேற்கூரையுடன் கூடிய நடைபாதை மற்றும் கருவறையில் உள்ள விளக்கு மாடம் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்காக ரூ. 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காணிப்பையூர் நாராயணன் நம்பூதிரிபாட்டுடன் கலந்தாலோசித்து, இந்த திட்டங்களை கோயில் நிர்வாகிகள் இறுதி செய்திருக்கிறார்கள்.
திருப்பரங்கோடு கோயிலில் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்ட மேற்குக் கோபுரம், கூத்தம்பலம் (பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும் இடம்), விளக்கு மாடம் ஆகியவற்றை சீரமைப்பதற்கு ரூ. 4 கோடி தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில் ஆனந்த் அம்பானி ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.
9 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கண்டியூர் கோயில் புனரமைப்புக்காக ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரியான்னூர் கோயில் குளத்தை சீரமைக்க ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார் ஆனந்த் அம்பானி.
வள்ளிக்குன்னு நிரம்காயிதா கோட்ட பகவதி கோயிலில் கருவறையை சீரமைக்கவும், பாரம்பரிய சிற்பங்களைப் பாதுகாக்கவும் ரூ. 75 லட்சம், பரப்பனங்காடி நெடும்பரம்பு பகவதி கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜையின்போது அன்னதானம் வழங்க ரூ. 40 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
On the occasion of birthday, Anant Ambani has donated Rs 22.55 crore for the conservation of heritage structures and development of nine temples in Kerala.