வாட்ஸ்ஆப் குழுவில் தொடங்கி 2 கோடி மோசடி வரை: திகிலூட்டும் தகவல்
வாட்ஸ்ஆப் குழுவில் சேர்வதற்கு முன்பு.. அவசியம் கவனிக்க..
ஆன்லைன் வர்த்தக மோசடி என்ற பெயரில் புணேவில் நடந்துள்ள மோசடிச் சம்பவம் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இது குறித்து புணேவைச் சேர்ந்த 53 வயது நபர் அளித்த காவல்துறை புகாரில், தானும் தனது சகோதரரும் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வணிகம் என ரூ.2.45 கோடியை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி நடத்தப்பட்டது எப்படி?
தில்லி காவல்நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாட்ஸ்ஆப் குழு மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் நம்ப வைக்கப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் வழிகாட்டியதன் மூலம், சகோதரர்கள் இருவரும் பங்கு வர்த்தகக் கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் குழுவில் வரும் ஆலோசனைகளின் பேரில் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள்.
அப்போது மோசடியாளர்கள், பங்குகளை வாங்க ஒரு லிங்க் அனுப்பியிருக்கிறார்கள். அதில் சகோதரர் ரூ.1,67,80,000 செலுத்தியிருக்கிறார். இளைய சகோதரர் ரூ.77,50,000 செலுத்தியிருக்கிறார். இருவரும் தங்களது பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டதாக நினைத்துக் கொண்டார்கள்.
பிறகு, அவர்களுக்கு ரூ.8 கோடி லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. அந்தப் பணத்தை எடுக்க சகோதரர்கள் முயற்சித்தபோது, மோசடியாளர்கள், உங்களது கணக்கு செபியால் முடக்கப்பட்டிருப்பதாக சாக்குச் சொல்லயிருக்கிறார்கள்.
இதனால்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இவர்கள் தெரிந்து கொண்டனர். பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்து, தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, இதுபோன்று வாட்ஸ்ஆப் குழுக்களில் சேரும் போதும் பிறர் நம்மை சேர்க்கும்போதும் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.