முகப்பு
இந்தியா

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம்: பாஜக, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

Updated On : 29 மே, 2024 at 2:17 AM
மம்தா பானா்ஜி
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸýக்கு எதிராக விளம்பரம் வெளியிட்டதற்காக பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அக்கட்சி செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டர்களுக்கு எதிராக ஊடகங்களில் பாஜக விளம்பரங்கள் வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் நாளிதழில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களையும் உயர்நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சமர்ப்பித்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாஜகவின் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளது வெளிப்படையாகத் தெரிவதாக கூறியது. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 அல்லது அடுத்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை எந்த வடிவிலான ஊடகத்திலும் பாஜக வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க பாஜக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திரிணமூல் காங்கிரஸ் குறித்து "எக்ஸ்' தளத்தில் பாஜக அவதூறான விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பொய்யானது, அவதூறானது என்று தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கக் கோரி பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் அந்த விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.