ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கு: திரிணமூல் எல்.எல்.ஏவின் கணவருக்கு சிபிஐ சம்மன்!
பணி நியமன மோசடி: திரிணமூல் எம்.எல்.ஏ கணவருக்கு சிபிஐ சம்மன்!
பள்ளிகள் மற்றும் நகராட்சிகளில் பணி நியமனம் செய்யப்பட்டதில் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கணவருக்கு ஜுன் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
பாடகராக இருந்து அரசியல்வாதியான ராஜர்கட்-கோபால்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ அதிதி முன்ஷியின் கணவர் தேவராஜ் சக்ரவர்த்தி வடக்கு கல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகமான நிசாம் பேலஸில் ஜுன் 4-ம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிதான்நகர் நகராட்சியில் சக்ரவர்த்தி மேயர் கவுன்சில் உறுப்பினராக உள்ளார். ஜுன் 4-ம் தேதி தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட வேண்டியிருப்பதால் ஆஜராக வேறு தேதி அளிக்குமாறு சிபிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார். சிபிஐ தரப்பிலிருந்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் சக்ரவர்த்தியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதில் ஆசிரிய தகுதித் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதே ஆண்டில் சிபிஐ விசாரணைக்கு அவர் உள்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.