தில்லியில் சமீப நாள்களாக உச்சபட்ச வெப்பநிலை உணரப்படும் நிலையில் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பிகாரை சேர்ந்த 40 வயதானவர் தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் வெப்பநிலை 107 டிகிரிக்கு அதிகமாக பதிவானதாகவும் எந்தவித குளிர்சாதன வசதியும் இல்லாது அவர் அறையில் வாழ்ந்துவந்ததாகவும் அவரை கவனித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியின் முங்கேஷ்பூரில் நாட்டின் எந்த வானிலை மையத்திலும் உணரப்படாத அதிகபட்ச வெப்பநிலை அளவான 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தானியங்கி வானிலை அளவீட்டு சாதனம் பதிவு செய்துள்ளது. இது இயந்திரத்தின் கோளாறா அல்லது குறிப்பிட்ட அந்த பகுதியில் அதிக வெப்பநிலை பதிவானதா என்பது குறித்து வானிலை மைய அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். தில்லியில் உள்ள 20 வானிலை அளவீட்டு தானியங்கி சாதனங்களில் 14 இடங்களில் வெப்பநிலை சிறியளவில் குறைந்தாலும் சராசரியாக 45-50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை இல்லாதளவில் அதிகபட்ச வெப்பநிலை, அதிகளவிலான மின்சார தேவை, கடுமையான நீர் பற்றாக்குறை ஆகியவற்றால் நாட்டின் தலைநகரில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஹரியாணா தில்லிக்கு அளிக்க வேண்டிய யமுனை நதி நீரின் முறையான பங்களிப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் வெப்ப தாக்கத்தால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.