ராஜிநாமா செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார்! முதல்வர் யோகிக்கு மிரட்டல்!
அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்ட 10 நாள் கெடு
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு, சனிக்கிழமை (நவ. 2) மாலையில் பெறப்பட்ட குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது, ``10 நாள்களுக்குள் முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்யாவிட்டால், அவரும் பாபா சித்திக்கைப் போல கொல்லப்படுவார்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்டதால், கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அண்மையில் ஹிந்தி நடிகர் சல்மான் கான், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜீஸான் சித்திக்குக்கும் கொலை மிரட்டல் வந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காய்கறி விற்பவர்கூட சல்மான் கானிடம் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு