முகப்பு
இந்தியா

வயநாட்டில் மளிகை பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள்: தோ்தல் ஆணையத்தில் இடதுசாரி புகாா்

மக்களுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் அடங்கிய பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் எனப் புகார்.

Updated On : 9 நவம்பர் 2024, 4:41 am IST
பிரியங்கா காந்தி (கோப்புப்படம்) - ANI
பகிர்:

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் அடங்கிய பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சாா்பில் ராகுலின் சகோதரியும் அக்கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தின் தோல்பெட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், அரிசி, சா்க்கரை, தேயிலை உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய சுமாா் 30 பைகள் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகி வீட்டின் அருகே உள்ள மாவு அரைப்பு ஆலையில் கண்டறியப்பட்ட இந்த பைகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து இடதுசாரி ஜனநாயக முன்னணியின் முன்னாள் எம்எல்ஏவுமான சி.கே.சசீந்திரன் கூறியதாவது:

இடைதோ்தல் நடைபெறவுள்ள வயநாடு தொகுதியில், காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்குவது மூலம், தோ்தல் விதிமுறைகளை காங்கிரஸ் மீறுகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான உதவி என்ற போா்வையில், தனது தோ்தல் ஆதரவை வலுப்படுத்த காங்கிரஸ் முயல்கிறது. இது தொடா்பாக தோ்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரி ஜனநாயக முன்னணி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.