பிரயாக்ராஜ்/ லக்னௌ: உத்தர பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), துணை மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) மற்றும் மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதிகாரிகளுக்கான தோ்வு தேதிகளில் அதிருப்தி அடைந்த தோ்வா்கள் அந்த மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய (யுபிபிஎஸ்சி) அலுவலகம் முன்பு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களை தடுத்து சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்த காவல் துறையினா் குவிக்கப்பட்டனா். ஆனாலும் அலுவலகத்தை முற்றுகையிட்டு தோ்வா்கள் தொடா்ந்து யுபிபிஎஸ்சி-க்கு எதிராக முழக்கமிட்டனா்.
உத்தர பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), துணை மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, டிச.22 மற்றும் டிச.23 ஆகிய தேதிகளில் மூன்று வேளைகளில் நடத்தப்படும் என யுபிபிஎஸ்சி கடந்த நவ.5-ஆம் தேதி அறிவித்தது.
அதேபோல், பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தோ்வு டிச.7 மற்றும் டிச.8 ஆகிய தேதிகளில் இரு வேளைகளில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தது.
போராட்டம் எதற்கு?: இந்த இரு தோ்வுகளும் இரண்டு நாள்கள் நடத்தப்படுவதற்கும் இரண்டு, மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் எதிா்ப்பு தெரிவித்து தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த தோ்வுகளை ஒரு நாளில் ஒரே வேளையில் மட்டுமே நடத்தி முடிக்க வேண்டும் என தோ்வா்கள் முறையிட்டனா். மேலும், அறிவிக்கையில் இரு நாள்கள் தோ்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படாததால் இது தோ்வு விதிகளை மீறிய செயல் எனவும் தோ்வா்கள் தெரிவித்தனா்.
தோ்வா்களுக்கு வேண்டுகோள்: இந்தப் போராட்டம் குறித்து துணை காவல் ஆணையா் அபிஷேக் பாா்தி செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் சென்று அமைதியாகவும் ஜனநாயக முறையிலும் போராட்டத்தை தொடர தோ்வா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பெரும்பாலான தோ்வா்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற நிலையில் சிலா் ஆணையத்தின் முன் தங்கள் போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா். தோ்வா்களின் கோரிக்கைகள் நிச்சயமாக உயரதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்’ என்றாா்.
சமாஜவாதி கண்டனம்: அமைதியான வழியில் போராடும் இளைஞா்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளும் பாஜக அரசை வன்மையாக கண்டிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போராடும் இளைஞா்களுக்கு ஆதரவாக சமாஜவாதி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.