முகப்பு
இந்தியா

அமித் ஷா தலைமையில் செயல்படும் குண்டர்கள்: கேஜரிவால் குற்றச்சாட்டு

அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சட்டம், ஒழுங்கு மேம்பட வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தல்

Updated On : 28 நவம்பர் 2024, 12:15 pm IST
அமித் ஷா - அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையின்கீழ் குண்டர்கள் செயல்படுவதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, `கடந்த 2 ஆண்டுகளாக தில்லியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. 1990 ஆண்டுகளில் மும்பையில் நிழலுலக தாதாக்கள் ஆதிக்கம் செலுத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற சூழ்நிலையை தில்லியும் எதிர்கொள்ளும் என்று நினைக்கவில்லை.

தில்லி முழுவதும் குண்டர்கள் கைப்பற்றியுள்ளனர்; வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் செல்கிறது. துப்பாக்கிச் சூடும் பொதுவாகி விட்டது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? தில்லியின் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குதான் உள்ளது.

Advertisement

அமித் ஷாவின் தலைமையில்தான், குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்களின் தலைநகரமாக தில்லி மாறியுள்ளது. கல்வி, சுகாதாரம், மின்சாரத்திற்கான பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினார்கள்; அவற்றை நான் நன்றாக வழிநடத்தினேன். சட்டத்தின் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்தனர்; ஆனால், அது மோசமடைந்து விட்டது.

சில நாள்களுக்கு முன்பாக, நாங்லோயில் கடைக்காரர் ஒருவர் மீது இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த என்னை பாஜகவினர் தடுத்தனர். பாதிக்கப்பட்டவரைச் சந்திக்க என்னை ஏன் பாஜக அனுமதிக்கவில்லை? அவர்கள் எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்? மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்படுகிறார்கள். சாமானிய மக்கள், வணிகர்கள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மேம்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.