முகப்பு
இந்தியா

மக்கள் பணத்தில் நடத்தப்பட்ட அம்பானி வீட்டுத் திருமணம்! ராகுல்

ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது பற்றி...

Updated On : 1 அக்டோபர், 2024 at 10:03 AM
ராகுல் காந்தி
பகிர்:

அம்பானி வீட்டுத் திருமணம் மக்கள் பணத்தில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், பணக்காரர்கள் கோடிக் கணக்கில் செலவழிக்கும் திருமணத்தை ஏழை விவசாயிகள நடத்த வேண்டுமென்றால் கடனில் மூழ்க வேண்டிய கட்டமைப்பை மோடி உருவாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியாணாவின் பஹதுர்கரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

”இன்றைய இந்தியாவில் எல்லாப் பணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோடீஸ்வரர்களுக்கு செல்கிறது. அதே சமயம், பெட்ரோல், டீசல், வெங்காயம் போன்ற பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம் உங்கள் பக்கெட்டுகளில் இருந்து தொடர்ந்து பணம் வெளியேற்றப்படுகிறது.

ஒரு பொருளுக்கு அதானி - அம்பானி செலுத்தும் அதே ஜிஎஸ்டியை ஏழை விவசாயிகளும் செலுத்தி வருகின்றனர். இதனைக் கண்டு ஒரு முடிவெடுத்தேன். அம்பானி - அதானிக்கு மோடி எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ, அதே அளவிலான பணத்தை நாட்டின் விவசாயிகள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று.

இந்தியாவில் அனைத்து குடிமக்களும் சமம் என்று அரசியலமைப்பு சொல்கிறது.

ஆனால், கோடீஸ்வரர்களின் கோடிக் கணக்கான கடனைத் தள்ளுபடி செய்யும் மோடி, ஏழை விவசாயிகள், பெண்களின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறார். அதானியின் ஆதாயத்துக்காக மூன்று கறுப்புச் சட்டங்களை மோடி கொண்டு வந்தார். இதன்மூலம் அரசியலமைப்பு தாக்கப்பட்டது.

அம்பானி வீட்டுத் திருமணத்தை பார்த்தீர்களா? அந்த திருமணத்துக்கு கோடிக் கணக்கில் செலவழித்தார் அம்பானி. இது யாருடைய பணம்? உங்கள் பணம். உங்கள் பிள்ளைகளின் திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்கும் நிலையில், நாட்டின் 25 பேரின் வீட்டுத் திருமணத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்யலாம் என்ற கட்டமைப்பை மோடி உருவாக்கியுள்ளார். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் இல்லையா?

நான் சித்தாந்தத்தை வைத்து போரிடுகிறேன். மோடி, பாஜக உள்பட யாரையும் வெறுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த ராகுல் காந்தி, வாகனப் பேரணியில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.