ரத்தன் டாடா காலமானார்!
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு பற்றி...
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், புதன்கிழமை இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
டாடா நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவடையச் செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ரத்தன் டாடா. 1991 முதல் 2012 வரையில் டாடா குழுமத்தின் தலைவராக அவர் பதவி வகித்து வந்தார்.
Advertisement
Advertisement
அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
இரங்கல்: டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர் அம்பானி, அதானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30-க்கும் அதிகமான நிறுவனங்களை ரத்தன் டாடா நிர்வகித்து வந்தார். உலகின் முன்னணி தொழிலதிபராக இருந்தபோதும், கோடீஸ்வரர்களின் பட்டியலில் அவர் எப்போதும் இடம்பெற்றதே இல்லை; இதற்கு டாடா குழுமத்தின் 66 சதவீத லாபம் அறக்கட்டளைக்கு பயன்படுத்தப்படுவதுதான் காரணம். இதன் மூலம் கல்வி, மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
டாடா குழுமங்களின் தினசரி செயல்பாடுகளில் இருந்து அவர் விலகினாலும், டாடா அறக்கட்டளைகளுக்கு மட்டும் தலைமை வகித்து வந்தார்.
1996-இல் டாடா தொலைத்தொடர்பு சேவையையும், 2004-இல் டாடா கன்சல்டென்ஸி நிறுவனத்தையும் தொடங்கினார். இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
2009-இல் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நனவாக்க ரூ.1 லட்சத்தில் டாடா நேனோ காரை அறிமுகம் செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.