பாபா சித்திக் கொலை வழக்கில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு, தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு மாதிரிகளைச் சேகரித்தது. மேலும் தாக்குதல் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கு அருகிலுள்ள இடங்களின் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு குற்றவாளி தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஹரியாணாவைச் சேர்ந்த குர்மெயில் பல்ஜித் சிங் (23) மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) என போலீஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராக தொடர்புடைய பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள், கொலை உட்பட, ஆயுதச் சட்டம் மற்றும் மகாராஷ்டிர போலீஸ் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் 9.9 எம்எம் பிஸ்டலில் இருந்து நான்கு முதல் ஐந்து சுற்றுகள் வரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர், அதை போலீஸார் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக மும்பை காவல்துறையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க சில குழுக்கள் மகாராஷ்டிரத்திலிருந்து விரைந்துள்ளன. இந்த நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கு முன்பு ஒரு மாதம் ஒத்திகையில் ஈடுபட்டதாகவும், கொலை செய்வதற்காக மூன்று பேரும் ஆட்டோ ஒன்றில் வந்து சம்பவ இடத்தில் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலையாளிகள் துப்பாக்கியால் சுடும்போது முகத்தில் கர்ச்சீப் கட்டி இருந்தனர் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.