முகப்பு
இந்தியா

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை...

Updated On : 20 அக்டோபர், 2024 at 5:25 PM
கோப்புப்படம்
பகிர்:

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்ட சுமார் 200 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் சாப்பிடுவதற்காக, அஸ்ஸாமில் பாரம்பரியமாக சமைக்கப்படும் ‘ஜல்பான்’ தயாரிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிற்றுண்டி சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து உடல்நலன் பாதிக்கப்பட்ட 53 பேர் உடனடியாக அரசு சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்ததால் அவர்கள் இருவருக்கும் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு ஏற்கெனவே கெட்டுப்போயிருந்தது அதன்பின்னரே தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மேலும் 150 பேருக்கு லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக எம்எல்ஏ பிஸ்வஜித் பூகான் கூறுகையில், “கெட்டுப்போன உணவை சாப்பிட்ட எவருக்கும் நல்வாய்ப்பாக தீவிர பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், அந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதாகவும்” தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.