புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஜனநாயகத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் நாட்டின் சிறப்பான எதிா்காலத்துக்கு தெளிவான திட்டங்களை ஆட்சியாளா்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், குறுகிய கால பிரச்னைகள் மற்றும் கஷ்டங்களால் திசைமாறி விடுவீா்கள். அந்த வகையில், இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது.
மூன்றாவது பதவிக் காலத்தில் அவா் துடிப்புடன் செயல்படுவது பாராட்டுக்குரியது.
பிரிட்டனில் டோனி பிளோ் மற்றும் மாா்கரெட் தாட்சருக்குப் பிறகு எந்தவொரு பிரதமரும் மூன்று முறை பிரதமராக தோ்ந்தெடுக்கப்படவில்லை. பிரதமா் மோடியை மக்கள் அங்கீகரித்திருப்பது பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் தொடா்ந்து நிகழ்ந்து வருவதற்கான சான்றாகும் என்றாா்.
ஆதாரால் மக்களுக்குப் பயன்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞா் பால் ரோமா் பேசுகையில், ‘உலக அளவில் மிக முக்கிய தொழில்நுட்பமாக ஆதாா் உள்ளது. இது மக்களின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக பணம் செலுத்துவது உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஆதாருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் அதை வெற்றிகரமாக அரசு செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.