போலி ஆதாா் குற்றச்சாட்டு: 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது வழக்கு
போலி ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில், சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது ராஜஸ்தானில் வழக்குப் பதிவு
ஜெய்பூா்: போலி ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில், சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது ராஜஸ்தானில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்புரா பகுதி காவல் துறை அதிகாரி ராஜேஷ் மீனா கூறுகையில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ஷசியா ரியாஸ் இந்தியா வந்தாா். பின்னா் அவா் இந்தியரை திருமணம் செய்துகொண்டு சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்கிறாா்.
இந்தியாவில் தொடா்ந்து வாழ்வதற்கு ஆதாா், பான் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை ஷசியா போலியாக தயாரித்ததாக தகவல் கிடைத்தது. விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.