32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
குஜராத்தில் 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குஜராத் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் மனீஷ் தோஷி நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்வதில் பாஜக அரசு ஏமாற்றி வருவதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான பொய்யான தகவல்களைக் கூறி அவர்கள் ஏமாற்றி வருகின்றனர். பாஜக கல்வி அமைச்சர் 4,000 ஆசிரியர்களை சமீபத்தில் நியமித்துள்ளதாகக் கூறியதில் உண்மையில்லை.
Advertisement
Advertisement
குஜராத்தில் 32,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இதனால், டெட் - டேட் தேர்வு எழுதிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நிரந்தர நியமனங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், புதிய நியமனங்கள் என்பது தற்போதுள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதே. இதன் மூலம், தகுதி வாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெட் தேர்வு என்பது 1 முதல் 8 வகுப்பு வரையிலான ஆசிரியராகக் கட்டாயத் தகுதியாகும். அதேபோல, டேட் தேர்வு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கானத் தேர்வாகும்.
மாணவர் சேர்க்கைக் குறைவாக உள்ளதாகக் காரணமாகக் காட்டி அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளை இணைக்கவும் அல்லது மூடவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இது பழங்குடியின மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சதி என்றும் விமர்சித்துள்ளார்.
”நாம் ஒரு மோசமான நிலையை அடைந்துள்ளோம். பல பள்ளிகள் ஒரு வகுப்பறையுடன் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் பல வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், பாஜகவின் ‘ஞான சஹாயக் யோஜனா’ திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது. மாநிலத்தின் இளைஞர்களை பொருளாதார ரீதியாக சுரண்டும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.
நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, 31 சதவீததிற்கு மேலான அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது” என மனீஷ் தோஷி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.