முகப்பு
இந்தியா

மணிப்பூர்: ட்ரோன் தாக்குதலால் மண்டபங்களில் தஞ்சமடையும் மக்கள்

ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படுவதால், மக்கள் சமூக மண்டபங்களில் தஞ்சம்

Updated On : 4 செப்டம்பர், 2024 at 7:14 PM
கோப்புப் படம்
பகிர்:

மணிப்பூரில் ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்படுவதால், மக்கள் சமூக மண்டபங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.

செஞ்சம் சிராங் கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது, ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அப்பகுதி மக்கள் வீடுகளில் தக்குவதற்கு அஞ்சி, சுமார் 10 குடும்பங்கள் வரையில் சமூக மண்டபங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Advertisement

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததாவது, ``செஞ்சம் சிராங்கில், இதற்கு முன்பு பல துப்பாக்கிச் சண்டைகளைக் நடந்திருப்பதால், குடியிருப்பு பகுதிகளைச் சரிபார்க்கும் ட்ரோன்களிலிருந்துதான் இந்த சலசலப்பு வருவதாக எண்ணினோம். இருப்பினும், சில நொடிகளில், ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது.

நானும் என் மகனும் வெளியே வந்து பார்த்தபோது, பசு கொட்டகையில் இருந்து புகை எழுவதைக் கண்டோம். இரண்டாவது வெடிகுண்டு, என் மகள் இருந்த எங்கள் படுக்கையறையின் கூரைமீது விழுந்ததில், அவர் காயமடைந்தார்’’ என்று கூறினார்.

தாக்குதலில் பாதிப்படைந்த மற்றொருவரான வாதம் கம்பீர் என்பவர் கூறியதாவது ``ட்ரோன்களின் ஒலி கேட்டபோது நாங்கள் கவலைப்பட்டோம். கௌட்ரூக்கில் குண்டுகள் வீசப்பட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், அடுத்த நாள் எங்கள் கிராமம்தான் இலக்காக மாறியது.

தப்பித்துக் கொள்வதற்காக நாங்கள் சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தை நோக்கி ஓடினோம். ஆனால், எங்களைப் பின்தொடர்ந்த ட்ரோன், வெடிகுண்டை வீசியதில், நாங்கள் முன்னோக்கி வீசப்பட்டு தரையில் மோதியதில் காயமடைந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பிரேன் சிங் ``ட்ரோன்களைப் பயன்படுத்தி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீது குண்டுகள் வீசுவது என்பது பயங்கரவாதச் செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ட்ரோன்களை உயர் அதிகாரிகளின் உதவியின்றி, இறக்குமதி செய்தல் என்பது எளிதானதல்ல; இந்த விவகாரத்தில் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று மத்தியப் படை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.