பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் -ராஜ்நாத் சிங்
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல்
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களம் காண்கின்றன.
இந்தச் சூழலில், ஜம்முவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் எனப் பேசியுள்ளார்.
ராம்பன் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(செப். 8) பாஜக வேட்பளர் ராகேஷ் சிங் தாக்குருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மக்களை பாகிஸ்தான் வெளிநாட்டவர்களைப் போல் நடத்துகிறது. ஆனால் நாங்கள் உங்களை எங்களுள் ஒருவரைப் போல் கருதுவோம். நீங்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும்.”
“ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. இப்போது இங்குள்ள இளைஞர்கள் துப்பாக்கிகளுக்கு பதிலாக, மடிக்கணினிகளை தங்கள் கைகளில் ஏந்தியுள்ளனர். இப்போது ஸ்ரீநகரிலுள்ள மக்கள் மீது எவருக்கும் துப்பாக்கிச்சூடு நடத்த தைரியம் இல்லை.
அரசமைப்புச் சட்டப்பிரிவு-370 மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. ஆனால், பாஜக இருக்கும் வரை அது நிறைவேறாது.
ஜம்மு காஷ்மீரில் அடுத்து அரசு அமைக்க பாஜகவுக்கு ஆதரவளியுங்கள், இதன்மூலம், இப்பகுதியில் பெரும் வளர்ச்சி ஏற்பட நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.
காஷ்மீர் அடையவுள்ள வளர்ச்சியை பார்க்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், “நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து வாழ விரும்பவில்லை, இந்தியாவுக்கு செல்வோம்’ எனச் சொல்ல வேண்டும்.
2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பெற்ற பின், மத்திய அரசின் சிறப்பான செயல்பாட்டால், இந்தியா பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசு சுமூகமாக செயல்பட பிரதமர், முதல்வர் பதவிகளில் திறம் வாய்ந்த உறுதிமிக்க நபர் இருக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவதால், இந்திய மட்டுமன்றி வெளிநாட்டு மக்களும் உற்று நோக்குகின்றனர். பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். பாஜக அரசு அமைந்தால், ஜம்மு காஷ்மீர் நாட்டிலேயே முதல் மாநிலமாக மட்டுமல்லாது, நவீனமயமான பகுதியாகவும் மாறும்” என்றார்.