தெலங்கானாவின் சொத்துப் பிரச்னை காரணமாக கணவரின் உடலை தகனம் செய்யவிடாமல் இரண்டு நாள்கள் மனைவி தகராறு செய்துள்ளார்.
ஊர்ப் பெரியவர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சொத்தில் பங்கு தருவதாக வாக்குறுதி அளித்த பிறகு, இரண்டு நாள்கள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டிருந்த சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது.
சொத்துப் பிரச்னை
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த சுனில் (வயது 36) மற்றும் சந்தியா ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார்.
இதனிடையே, கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், 3 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுனில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு மாந்தானி பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் நடைபெற இருந்தது.
இந்த செய்தியை அறிந்த சந்தியா, பெற்றோருடன் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்குச் சென்று, தனது மகனுக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஊர்ப் பெரியவர்கள் சமரசம்
இரண்டு நாள்கள் ஆற்றங்கரையில் சடலத்தை வைத்துக் கொண்டு சுனிலின் பெற்றோரும், சந்தியாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஊர்ப் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
இறுதியில், சொத்தில் சந்தியாவின் மகனுக்கு பங்கு தருவதாக சுனில் தரப்பில் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, மகனை இறுதிச் சடங்கு செய்ய அவர் அனுமதித்தார்.
சொத்துக்காக ஆற்றங்கரையில் இரண்டு நாள்களாக சடலத்தை வைத்து பிரச்னை செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.