போதையில் பெண் மருத்துவரை இழுத்து... அரசு மருத்துவமனையில் நோயாளி அட்டூழியம்!
மது போதையில் பெண் மருத்துவரைத் தாக்கிய நோயாளி
அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மது போதையில் பெண் மருத்துவரைத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை(செப்.11) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதைக் கடந்த நபர் ஒருவர், திடீரென பிடித்து இழுக்க முற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த பெண் மருத்துவரைத் தாக்கியுமுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர், அவர் பிடியிலிருந்து தப்பிக்கும் முயற்சித்தபோது, மருத்துவர் அணிந்திருந்த கோட் கிழிந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்து மருத்துவமனை பாதுகாவலர்கள் அங்கே செல்வதற்குள் அங்கிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டார். எனினும், மருத்துவமனை வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர்(எஸ்பிஎஃப்) அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
விசாரணையில் அந்த நபர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
பணியிலிருந்த பெண் மருத்துவரிடம் பட்டப்பகலில் போதை ஆசாமி ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இச்சம்பவத்திற்கு இளம் மருத்துவர்கள் சங்கம்(ஜூடா) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர்கள் மருத்துவமனை முதல்வரிடம் புகாரும் அளித்துள்ளனர்.
கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைகளில் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.