அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைநகரின் கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைநகரின் கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தலையொட்டி மே மாதம் இடைக்கால ஜாமீனில் வெளியேவந்தார். இதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறையின் வழக்கில் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26ல் சிபிஐயால் கேஜரிவால் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இதையடுத்து சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நேற்று மாலை திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டார். ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். நான் வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்ததற்கும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் என்னை வரவேற்க வந்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நமது நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.
இதையடுத்து இன்று கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவி சுனிதா, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் ஆகியோர் சென்றனர்.