திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அளவில் சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை குற்றச்சாட்டு எழுப்பினர்.
தொடர்ந்து, ஆய்வகத்தின் பரிசோதனை முடிவில், லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
பவன் கல்யாண் கண்டனம்
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.
மேலும், இது கோவிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்திய அளவில் கோவில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது.
தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும்.
சநாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.