மேற்கு வங்கத்தில் வெள்ளம்... உதவிக்கு வராத மத்திய அரசு: மமதா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல இடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன. இந்த இயற்கைப் பேரிடரை சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் தற்போது வரை செய்யவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
”வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கூச் பெஹர், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்யும் கனமழையால் கோசி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், பிகாரிலும், மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினஜ்பூர் மற்றும் மால்டா மாவட்டங்களிலும் வரும் நாள்களில் பாதிப்புகள் மோசமடையக் கூடும்.
இந்தப் பேரிடரைச் சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இங்குள்ள ஃபராக்கா தடுப்பணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பலமுறை நினைவூட்டியும் அது நடத்தப்படவில்லை. அதன் நீர் தாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.
”மேலும், இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினால் அவருடைய அமைச்சர்கள் எவரேனும் பதிலளிக்கின்றனர். இது சரியானதல்ல. நான் அதனைத் திருத்தி மீண்டும் ஒருமுறை அனுப்புவேன்” என்று கூறிய மமதா, வெள்ள உதவிகள் தொடர்பாக இருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். வெள்ள அபாயம் தொடர்பாக ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
”பாஜக தலைவர்கள் தேர்தலின் போது மட்டுமே மெற்கு வங்கத்திற்கு வருகை தருவார்கள். ஆனால், மாநிலத்தின் முக்கியத் தேவையின் போது வரமாட்டார்கள். மேற்கு வங்கத்திற்கு மட்டுமே வெள்ள மானியங்கள் தரப்படாமல் உள்ளது” என்றும் மமதா பானர்ஜி விமர்சித்தார்.