வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா
வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்றார் அமித் ஷா.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்றும், இது பின்னோக்கிய விளைவுகளை ஏற்படுத்தாது எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இந்த மசோதா மூலம் மத விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
Advertisement
Advertisement
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் அமித் ஷா,
''அவையினர் அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். நண்பகல் 12 மணிமுதல் நடைபெற்றுவரும் விவாதத்தை கவனித்து வருகிறேன். பலர் இந்த மசோதாவை தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அது இயல்பாகவோ அல்லது அரசியலாகவோ இருக்கலாம். அவையின் இவ்வாறு நடந்துகொள்வதன் மூலம் நாடு முழுவதும் தவறான கருத்துகளைப் பரப்ப அவர்கள் முயற்சிக்கின்றனர்.
வக்ஃப் மசோதா பெயரில் இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வாக்கு வங்கி அரசியல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதனை இலக்காக வைத்தே மக்களவையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றன.
வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; அந்த எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், வக்ஃப் வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள்.
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். அதற்காக இஸ்லாம் மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைகளில் அரசு தலையிடும் என தவறான கருத்துகளை பரப்ப முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம் அல்லாதவர்கள் எங்கு சேர்க்கப்படுவார்கள்? கவுன்சிலில் மட்டுமே. அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களால் மத நடவடிக்கைகளில் தலையிட முடியாது. வக்ஃப் சட்டத்திருத்தத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்து, அதன் நிர்வாகம் சட்டப்படி நடக்கிறதா? எந்த நோக்கத்துடன் நன்கொடை வழங்கப்பட்டது? போன்ற நிர்வாகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா