வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்களை இந்த மசோதா கொண்டுள்ளது.
இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இப்போது ஆம் ஆத்மி தரப்பிலிருந்து மசோதாவை எதிர்த் அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முஸ்லிம்களின் மதம் சார்ந்த மற்றும் கலாசார தன்னாட்சி அதிகாரத்தை புதிய சட்டத்திருத்த மசோதா மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதம் மற்றும் அதன்பேரிலான தொண்டு நி்றுவனங்களைப் பராமரிக்கும் சட்ட உரிமையில் குறுக்கீடு செய்வதாக புதிய சட்ட திருத்தம் அமைந்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்து வரும் ‘வக்ஃப் சட்டம், 1995-இல்’ பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு இந்த மனுவில் கடும் எதிர்ப்பும் இதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா...
நாட்டில் சமூக-மதப் பணிகளுக்காக நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கிலான ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025’ நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, 13 மணி நேரத்துக்கும் மேல் விவாதிக்கப்பட்டது. அன்றைய தினம் நள்ளிரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த அனைத்துத் திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மாநிலங்களவையில் பகல் ஒரு மணியளவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாத்துக்கு பின்னா், வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.