முகப்பு
இந்தியா

பந்திப்போராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொலை.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 12:14 PM
பந்திப்போரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டை.
பகிர்:
Updated On : 25 ஏப்ரல், 2025 at 12:07 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா்.

கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்புப்படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

Advertisement

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படைப் பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், பந்திப்போரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையின் ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை பந்திப்போராவின் கோல்னார் அஜாஸ் பகுதியில் இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 12:08 PM

இதற்கிடையே, ஸ்ரீநகர் வந்த ராணுவத் தளபதி உபேந்திர திவேதியிடம் பந்திப்போராவில் நடந்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும், விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு முன்னேற்றமாக பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினராலும் ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளாலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள லஷ்கர் பயங்கரவாதி ஹுசைன் ஆதில் தோகரின் வீடு மற்றும் டிராலில் உள்ள ஆஷிப் ஷேக்கின் வீடு வெடிகுண்டு மற்றும் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

காஷ்மீரின் குரீ பகுதியில் இருந்து 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற ஆதில் தோகர்; பாகிஸ்தானில் லஷ்கர்- இ- தொய்பாவில் இணைந்து பயங்கரவாதி பயிற்சிகளை பெற்று நாடு திரும்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.