முகப்பு
இந்தியா

அடுத்த 36 மணிநேரத்துக்குள் தாக்குதலுக்கு இந்தியா திட்டம்: பாகிஸ்தான்

அடுத்த 36 மணிநேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு..

Updated On : 30 ஏப்ரல் 2025, 11:07 am IST
பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கூட்டம். - ANI
பகிர்:

அடுத்த 24 முதல் 36 மணிநேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத் தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் அமைச்சர் கூறியதாவது:

“ஆதாரமற்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகின்றது.

பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எப்போதும் கண்டித்து வருகின்றோம்.

வெளிப்படையான நடுநிலை விசாரணை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இதனை தவிர்த்து மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது.

இந்தியாவின் எவ்வித ராணுவ தாக்குதலுக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து விளைவுகளும் இந்தியாவையே சாரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முழு சுதந்திரம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் செயல்பாடுகளில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி அண்மையில் சூளுரைத்தாா்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய மோடி, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகளை எடுக்கலாம். நம் நாட்டு பாதுகாப்புப் படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், பஹல்காம் தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் இந்தியா கடுமையான பதிலடி தர வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.