2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடி வரியை செலுத்தாமல் தவிா்ப்பவா்களுக்கு எதிராக உறுதியான தகவல்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது தொடங்கி, வருமான வரித் துறை சோதனை நடத்துவது வரை பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2024-25 நிதியாண்டில் வருமான வரித் துறை 465 சோதனைகள் மேற்கொண்டுள்ளது. இதில் ரூ.30, 444 கோடி கணக்கில் கட்டாத வருவாய் (கருப்புப் பணம்) கண்டறிப்பட்டது. இதற்கு முந்தைய இரு நிதியாண்டுகளில் முறையே 737 மற்றும் 1,245 வருமான வரித் துறை சோதனைகள் நடைபெற்றன. இதில் முறையே ரூ.37,622 கோடி மற்றும் ரூ.9,805 கோடி கணக்கில் காட்டாத வருமானம் கண்டறியப்பட்டது. இது தவிர பல கோடி ரூபாய் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.