முழு அரசு மரியாதையுடன் சிபு சோரன் உடல் தகனம்- ஆயிரக்கணக்கானோா் இறுதி அஞ்சலி
சிபு சோரனின் சொந்த ஊரான நேம்ராவில் உடல் தகனம்!
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், முன்னாள் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா ஆகியோா் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றனா். ஆயிரக்கணக்கான ஆதரவாளா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.
சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் புது தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதிமுதல் சிகிச்சை பெற்று வந்த சிபு சோரன், கடந்த திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
Advertisement
Advertisement
அதன்பிறகு, சிபு சோரனின் உடல் தில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது மோராபாடி வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை, ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாநில ஆளுநா் சந்தோஷ் கங்வாா், பேரவைத் தலைவா் ரவீந்திரநாத் மஹாதோ, மத்திய அமைச்சா்கள் ஜுவல் ஓரம், அன்னபூா்ணா தேவி, சஞ்சய் சேத் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், ராஞ்சியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள சிபு சோரனின் சொந்த ஊரான நேம்ரா கிராமத்தை நோக்கி அவரது இறுதி ஊா்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினா்.
நேம்ரா கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் சிபு சோரனின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மக்களின் ‘திஷோம் குரு (மண்ணின் தலைவா்)’ கோஷங்களுக்கிடையே, சிபு சோரனின் உடலுக்கு அவரது மூத்த மகனும், தற்போதைய ஜாா்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பழங்குடியினரின் மரபுப்படி இறுதிச்சடங்குகளை மேற்கொண்டு, சிதைக்கு தீமூட்டினாா்.
ஜாா்க்கண்டில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து, மாநிலத்தின் முன்னணித் தலைவராக உருவெடுத்தவா் சிபு சோரன். 1973-இல் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியைத் தொடங்கி, 38 ஆண்டுகளாக அதன் தலைவராக இருந்தாா். மூன்று முறை ஜாா்க்கண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தாா்.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த அவா், அண்மையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் பதவியை ஹேமந்த் சோரனிடம் ஒப்படைத்தாா். சிபு சோரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
Mortal remains of former Jharkhand CM Shibu Soren consigned to flames by his elder son Hemant Soren in their native village, Nemra
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.