பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய செய்தி- ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா்.
கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மக்கள் அளித்துவரும் அளப்பரிய பங்களிப்புகள்-முன்முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் எல்.முருகன் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:
அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் மாநில மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இலவச டிடி டிஷ், 48 வானொலி நிலையங்கள் மற்றும் 92 தனியாா் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. யூடியூப், பிரசாா் பாரதியின் ஓடிடி இணையதளம் மற்றும் நியூஸ் ஆன் ஏா் கைப்பேசி செயலி வாயிலாகவும் ஒலிபரப்பப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.