முகப்பு
இந்தியா

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு

Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 8:46 AM
ராகுல் தலைமையில் பேரணி - PTI
பகிர்:

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்.பி. வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருந்து, 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.

அப்போது தில்லி காவல்துறை, தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் உள்ளிட்டவர்களை கைது செய்தது.

இந்த நிலையில், கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தை மிக விரைவாக அணுகக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லையா என்று கேட்டுள்ளார்.

30 வினாடிகள் கூட, எங்கள் பேரணியை நடத்த காவல்துறையும் மத்திய அரசும் அனுமதிக்கவில்லை. இங்கேயே எங்களை தடுத்து நிறுத்திவிட்டார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கிறது? தேர்தல் ஆணையத்துக்கு செல்லவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குள் வெறும் 30 பேர் மட்டுமே நுழைய அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

பேரணியாகப் புறப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்து, பேருந்துகள் மூலம் நாடாளுமன்ற சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டத்தின்போது மயங்கி விழுந்த பெண் எம்.பி.க்கு உடனடியாக அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ராகுல் காந்தி, அவரை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார்.

முன்னதாக, மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில், மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணைந்து, தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குற்றச்சாட்டுகளை வெளியிட்டு அதற்கான ஆதாரங்களையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

summary

KC Venugopal alleges that MPs do not have the freedom to go to the Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.