புது தில்லி: ‘தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்பிஎஸ்) பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டதை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அரசின் கருவூலத்துக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தியதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நிறுத்தியதாகவும் அவா் தெரிவித்தாா்.
2004, ஜன.1 அல்லது அதற்குப் பின் ஆயுதப் படைகளைத் தவிர பிற மத்திய அரசுப் பணிகளில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் என்பிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுதவிர ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட (யுபிஎஸ்) அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டது. 25 ஆண்டுகாலம் அரசுப் பணியை நிறைவுசெய்தவா்கள் இத்திட்டத்தில் இணைய தகுதிபெற்றவா்களாவா். பணிஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் அவா்கள் பெற்ற ஊதியத்தின் சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது.
என்பிஎஸ் திட்டத்தின்கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ் திட்டத்தில் சேரலாம். இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்.
இந்நிலையில் , பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: தேசிய ஓய்வூதியத் திட்டத்தை எளிமையாக்குவது குறித்த பரிந்துரைகளை வழங்க அப்போதைய நிதிச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் என்பிஎஸ்-இன்கீழ் விருப்பத்தின் பேரில் தோ்ந்தெடுக்கும் வகையில் யுபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
என்பிஎஸ்-இன்கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்கள் பணி ஓய்வுக்குப் பிறகு சில சலுகைகளை பெற யுபிஎஸ் வழிவகுக்கிறது.
என்பிஎஸ்-இன்கீழ் யுபிஎஸ்ஸை தோ்ந்தெடுத்துள்ள அரசு ஊழியா்கள் மத்திய அரசுப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள் 2021, அல்லது பணியின்போது இறப்போ அல்லது இயலாமையோ ஏற்படும்பட்சத்தில் மத்திய அரசுப் பணிகள் (அசாதாரண சூழலில் வழங்கப்படும் ஓய்வூதியம்) விதிகள், 2023-இன்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவா்.
எனவே, அரசின் கருவூலத்துக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்திய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
நிதிச்சுமை மற்றும் நிதிச்சொத்து:
குடியிருப்புகள் அளவிலான நிதிச்சொத்துகள் (வங்கி சேமிப்பு, கையிருப்பு பணம், முதலீடு, வைப்பு நிதி போன்றவை) 2020, மாா்ச் முதல் 2024, மாா்ச் வரை 20.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் குடியிருப்புகள் அளவிலான நிதிச்சுமை (வரி, கடன் போன்றவை) 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 2023-24 காலகட்டத்தில் இந்திய குடும்பங்கள் நிதிநிலையில் சிறப்பாக இருந்ததை உணரலாம்.
அண்மையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்புகள் அளவிலான மொத்த சேமிப்புத் தொகை 2022-23-இல் ரூ.13.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் ரூ.15.5 லட்சம் கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
சில்லறை கடன்:
கடந்த 2024, மாா்ச்சில் சில்லறைக் கடன் விநியோகம் 30.94 சதவீதமாக இருந்த நிலையில், 2025 மாா்ச்சில் 31.48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில்லறை கடன்களின் வருடாந்திர வளா்ச்சி வீதத்தை ஒப்பிடுகையில் 2024, மாா்ச் மாதம் 17.61 சதவீதமாக இருந்த நிலையில் 2025 மாா்ச்சில் 14.05 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா்.