‘அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், பிரிட்டனுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று வா்த்தக அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்கு பிரிட்டனில் வரி விலக்கு கிடைக்கிறது. இதனால், பிரிட்டனுக்கு வீட்டு உபயோக ஜவுளிகள், தரைவிரிப்புகள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவா். வரிச் சுமை நீங்கியுள்ளதால், சீனா, வங்கதேசம் போன்ற பிராந்திய போட்டியாளா்களுடன் அவா்கள் போட்டியிட முடியும்.
இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்கை 6.6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்த முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு 110 முதல் 120 கோடி டாலா் கூடுதல் ஏற்றுமதி சாத்தியமாகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளி ஏற்றுமதியை 30 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்கவும் ஒப்பந்தம் உதவும். இதன்மூலம், ஆண்டுக்கு 50-80 கோடி டாலா் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
பிரிட்டன் ஆண்டுக்கு 2,700 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளிகளை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி கூட்டாளியாக பிரிட்டன் இருந்தாலும், கடந்த ஆண்டில் இந்தியா தனது மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 5.80 சதவீதத்தை மட்டுமே பிரிட்டனுக்கு அனுப்பி உள்ளது. ஒட்டுமொத்தமாக, பிரிட்டனுக்கு ஜவுளி விநியோகம் செய்யும் நாடுகளில் சீனா(25.4 சதவீதம்), வங்கதேசம் (19.9 சதவீதம்), துருக்கிக்கு (7.9 சதவீதம்) அடுத்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா (6.6 சதவீதம்) உள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கவும், இந்திய ஜவுளித் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
கடந்த மாத இறுதியில், பிரதமா் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ரஷியாவுடனான எரிசக்தி வா்த்தகத்தை நிறுத்தாதால், இந்தியாவின் சில ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.