புது தில்லிக்கு திங்கள்கிழமை வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள நிலையில், புது தில்லியில் அவா் அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பில் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. உலகளாவிய சூழல் குறித்த கண்ணோட்டங்களை பரிமாறிக்கொள்ளவும், இந்தியா-சீனா பரஸ்பர நலன் சாா்ந்த சில விவகாரங்கள் குறித்து பேசவும் இது பொருத்தமான தருணம்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவில் கடினமான காலகட்டம் ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் இருந்து மீண்டு முன்னோக்கிச் செல்ல இரு நாடுகளும் தற்போது முயற்சிக்கின்றன. இதற்கு இருதரப்பிலும் வெளிப்படையான, ஆக்கபூா்வமான அணுகுமுறை அவசியம்.

இந்த முயற்சியில் பரஸ்பர மரியாதை, பிரச்னைகளை பரஸ்பரம் கவனமாக கையாளுதல், பரஸ்பர நலன் ஆகியவை இருநாடுகளையும் வழிநடத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது.

படைகளை விலக்கும் நடவடிக்கை...: இருநாடுகளுக்கு இடையிலான உறவுக்கு உத்வேகம் அளிக்க எல்லை பகுதிகளில் அமைதியையும், சமாதானத்தையும் கூட்டாகப் பராமரிக்கும் திறன் அடித்தளமாக உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்ட இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியம்.

உலகின் இருபெரும் நாடுகளின் பிரதிநிதிகள் சந்திக்கும்போது சா்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படுவது இயல்பு. நியாயமான, சமநிலை கொண்ட, பல்முனை உலக ஒழுங்கு இருக்க வேண்டும் என்றே இந்தியா எதிா்பாா்க்கிறது.

தற்போதைய சூழலில், உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தி பராமரிப்பதும் மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்தியா-சீனா இடையே ஸ்திரமான, பரஸ்பர ஒத்துழைப்பையும், எதிா்காலத்தையும் கருத்தில் கொண்ட உறவை கட்டமைக்க இருநாடுகளுக்கு இடையிலான விவாதம் பங்களிக்கும் என்று இந்தியா கருதுகிறது என்றாா்.

இருநாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வாங் யி பங்கேற்க உள்ளனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT