75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரையில்,
நடப்பாண்டில் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன் NAVIC (இந்தியா விண்மீன் அமைப்புடன் வழிசெலுத்தல்) செயற்கைக்கோள் மற்றும் N1 ராக்கெட் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
ராக்கெட்டின் கொள்ளளவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது. இது 35 கிலோ எடையைத் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. இன்று 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைத் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் ராக்கெட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ராக்கெட் 40 மாடிக் கட்டட உயரம் கொண்டது என்று அவர் கூறினார்.
இந்தாண்டு தொழில்நுட்ப செயல் விளக்கச் செயற்கைக்கோள் (TDS) மற்றும் இந்திய இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-7R ஆகியவற்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது/
இது தற்போதுள்ள GSAT-7 (ருக்மிணி) செயற்கைக்கோளை மாற்றாக இந்தியக் கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 55 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 3 முதல் 4 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய விண்வெளித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, நாராயணனுக்குக் கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.