தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதைப் பற்றி...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை 21 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார்.
Advertisement
இந்த நிலையில், அந்த குடியரசு துணைத் தலைவா் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ராஜிநாமா, உயிரிழப்பு அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவர் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்கீழ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(ஆக.21) கடைசி நாளான நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக.20) காலை வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை பொதுச் செயலர் பிரமோத் சந்திர மோடி வேட்புமனுவைப் பெற்றுக் கொண்டார்.
வேட்பு மனு நான்கு தொகுப்புகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், 20 முன்மொழிபவர்கள் மற்றும் 20 வழிமொழிபவர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அதில், பிரதமர் மோடியைத் தவிர, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடியுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெபி. நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பல மூத்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலன் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹெச்டி குமாரசாமி, அதிமுகவைச் சேர்ந்த தம்பி துரை, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சி, லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மற்றும் அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகியோரும் கலந்துகொண்டனர்.