முகப்பு
இந்தியா

பொருளாதாரத்தில் பற்றாக்குறை மாறி, ஜனநாயகத்தில் பற்றாக்குறையான சூழல்! -சுதர்சன் ரெட்டி

இந்திய அரசமைப்பு அச்சுறுத்தலின்கீழ் இருக்கிறதா? விவாதம் நடத்த தயார் - குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி...

Updated On : 23 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பி. சுதர்சன் ரெட்டி
பகிர்:

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் ஜனநாயகத்தில் பற்றாக்குறை என்னும் சூழல் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பி. சுதர்சன் ரெட்டி சனிக்கிழமை(ஆக. 23) அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது:

"கடந்த காலங்களில், பொருளாதாரப் பற்றாக்குறை என்றதொரு பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது, ஜனநாயகத்தில் பற்றாக்குறை நாட்டில் நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு சவாலான சூழலும் நிலவுகிறது. அரசமைப்பின்படி இயங்கும் ஜனநாயகமாக இந்தியா தொடர்ந்தாலும், அது இப்போது அழுத்தத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசமைப்பு அச்சுறுத்தலின்கீழ் இருக்கிறதா? என்பது குறித்து விவாதம் நடத்த தயாராக இருந்தல், அதனை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயகம் என்பது தனி நபர்களுக்கு இடையிலான மோதலை விடுத்து, கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக அதிகம் இருக்க வேண்டும். அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவு மேம்பட தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

"அரசமைப்பை பாதுக்காப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் (குடியரசு துணைத் தலைவர் பதவி) அரசமைப்பை உயர்த்திப்பிடிக்கும் எமது பயணம் இனியும் தொடரும். அரசமைப்புக்கே பிரதான முன்னுரிமையளித்து உயர்த்திப்பிடித்த நான், ஒரு நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போதும் அதில் இதுவே குறிப்பிடப்பட்டிருந்து” என்றார்.

summary

B Sudershan Reddy on Saturday said there was a "deficit in democracy" in the country and the Constitution was "under challenge".

முழு கட்டுரையைப் படிக்க →