மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!
சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
வயது முதிா்வு சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளால் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகா் ரெட்டி (83), கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். அவரது உடல், ஹைதராபாதில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவா் கே.டி.ராமராவ் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், அவரது உடல் ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மருத்துவ ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. அப்போது, குடும்பத்தினா், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தெலங்கானாவின் மஹபூப்நகா் மாவட்டம், கொண்டராவ்பள்ளி கிராமத்தில் 1942-ஆம் ஆண்டில் பிறந்த சுதாகா் ரெட்டி, இடதுசாரி சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு, மாணவா் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றினாா்.
நல்கொண்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு இரண்டு முறை (1998-1999 மற்றும் 2004-2009) தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2012 முதல் 2019 வரை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினாா்.