ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!
ஒடிசாவில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம், வாகனம் பறிமுதல்.
ஒடிசாவில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு காவல் துறை ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்திற்குட்பட்ட ரோர்கேலா பகுதியிலுள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், இளைஞர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடையணிந்தவாறு சாகசத்தில் ஈடுபட்டார்.
சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக இவ்வாறு அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஸ்பைடர்மேன் உடையணிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியதால், சக பயணிகளுக்கும், நடைபாதையில் செல்வோரும் அச்சம் அடைந்தனர்.
Advertisement
அதிவேகமாகச் சென்றவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர், நெரிசல் மிகுந்த சாலையில் அதிவேகமாகச் சென்றது, நடைபாதையில் செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என காவல் துறையினர் ரூ.15,000 வரை அபராதம் விதித்துள்ளனர்.
அதோடு மட்டுமின்றி புகைப்போக்கியான சைலன்ஸரை சீரமைத்து அதிக ஒலி எழுவதைப்போன்று வைத்திருந்ததற்காகவும், போக்குவரத்து விதிமீறலில் இவை வருவதால், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், ஸ்பைடர்மேன் உடையணிந்து சாகசம் செய்ததற்கான காரணமும், காவல் துறையின் விசாரணையில் முரணாக இருந்ததால், அவரை காவல் துறையினர் கண்டித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!