முகப்பு
இந்தியா

போலி செய்திகளைத் தடுக்க புதிய விதிகள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு

போலியான தகவல்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம உருவாக்கப்பட்ட போலியான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதைத் தடுக்கவும், அவ்வாறு பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய விதிகளை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 3 டிசம்பர், 2025 at 8:44 PM
மக்களவையில் கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் -ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
பகிர்:

புது தில்லி: ‘போலியான தகவல்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம உருவாக்கப்பட்ட போலியான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதைத் தடுக்கவும், அவ்வாறு பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய விதிகளை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

போலி செய்திகள் பரப்பப்படுவது மிகத் தீவிரமான விஷயம். ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இத்தகைய போலி செய்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம உருவாக்கப்பட்ட போலியான விடியோக்கள் பரப்ப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, தனது அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. அதில் பல நல்ல பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக் குழு அளித்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய விதிகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

போலி செய்திகளுக்கும் - பேச்சு சுதந்திரத்துக்கும் இடையே நுட்பமான சமநிலையை ஏற்படுத்துவது அவசியம் என்றாா்.

இணையவழி சூதாட்டங்கள் மற்றும் பந்தையங்கள் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் அஸிவினி வைஷ்ணவ், ‘இணைய வழி பண விளையாட்டுகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு ஒருபோதும் தயங்காது’ என்றாா்.

சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பொய்யான தகவல்களைப் பரப்புவது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அரசும் இந்திய பத்திரிகை கவுன்சிலும் இதுபோன்ற புகாா்களை தீவிரமாக ஆராய்ந்து தேவையான சமயங்களில் நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.