சோனியா, ராகுல் ஆதரவாளர்களுக்கு தொல்லையளிப்பதே அமலாக்கத் துறையின் நோக்கம்: கர்நாடக துணை முதல்வர்
அமலாக்கத்துறை சம்மன்: கர்நாடக துணை முதல்வர் கண்டனம் பற்றி...
பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரின் சதாசிவநகர் இல்லத்தில் இன்று(டிச. 6) செய்தியாளர்களுடன் சிவகுமார் பேசியதாவது, “நேஷனல் ஹெரால்டுக்கும் யங் இந்தியாவுக்கும் நன்கொடை வழங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை இதன்மூலம் எங்களுக்குத் தொல்லையளிக்கிறது. இது சரியல்ல, கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆகவே, மூடி மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. அப்படியிருக்கும்போது, அமலாக்கத்துறை எங்கள் மீது குற்றப்பத்திரிகை சாட்டியிருப்பது ஏன் என்பது புரியவில்லை. இந்த வழக்கில் போலீஸ் புகார் அளிக்க தேவை உருவாகவில்லை. ஆனால், இப்போது தில்லி காவல் துறை என்னையும், எமது சகோதரர் டி. கே. சுரேஷையும் இம்மாத 19-ஆம் தேதிக்குள் கேட்கப்படும் விவரங்களை வழங்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, பிறப்பிக்கப்பட்ட சம்மன்களுக்கு நாங்கள் தேவையான விளக்கங்களை அளித்திருக்கிறோம். ஆனால், திரும்பவும் இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் நாங்கள் சட்டரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்.
நாங்கள் வரி செலுத்துகிறோம். ஆகவே, எங்களுக்கு விருப்பப்படும் எந்தவொருவருக்கும் நாங்கள் சுதந்திரமாக பணம் அனுப்புவோம். இதனிடையே, இவ்விவகாரத்தில் எங்களுக்கு தொல்லையளிக்கவே பிஎம்எல்ஏ வழக்குப்பதிந்துள்ளனர். சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவிப்பவர்களை துன்புறுத்தி தொல்லையளிப்பதும் குழப்பத்தை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கம் என்பது தெரிகிறது.
நேஷனல் ஹெரால்டும் யங் இந்தியாவும் காங்கிரஸ் கட்சியின் நிறுவனங்களாகும். நாங்களோ காங்கிரஸ்காரர்கள்... ஆகவே, இந்நிறுவனங்கள் இக்கட்டான தருணத்தில் இருந்தபோது உதவும்பொருட்டு எங்களது தொண்டு நிறுவனங்களிலிருந்து நாங்கள் பணம் அளித்திருக்கிறோம். அந்தச் சூழலில், பல பேர் உதவி புரிந்திருக்கிறார்கள்.
எமது சாகோதரர் எம்.பி.யாகப் பதவி வகித்தபோது பணம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இந்த நிலையில், எங்களுக்கு வெள்ளிக்கிழமை(டிச. 5) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறோம்” என்றார்.